அமைச்சர்களுக்கான பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. காலி செய்வதற்கு கால அவகாசம் கோரிய அவரது மனு ஆரம்ப நிலையிலே தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் பெர்காம்பூர் மக்களவையிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆதிர் ராஜன் சௌத்ரி. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த சௌத்ரிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியை இழந்த நிலையில், மீண்டும் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சௌத்ரி அமைச்சர்களுக்கான அரசு பங்களாவை காலி செய்யவில்லை.
இதுகுறித்து அரசு பங்களாக்களை நிர்வகிக்கும் இயக்குநரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சௌத்ரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த மூன்றாம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சௌத்ரி உடனே பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் சௌத்ரி தாக்கல் செய்த மனுவை, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.
''நீங்கள் ஒரு மக்களவை உறுப்பினர். உங்களுக்கு ஒதுக்கப்படாத அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கிறீர்கள். அதுகுறித்து முறையிடுகிறீர்கள். இது என்ன மனு? உடனே காலி செய்யுங்கள்'' என நீதிபதிகள் கூறினர்.
காலி செய்யுங்கள் என உத்தரவிட்டால் மட்டுமே காலி செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினர்.
தில்லியில் அரசு வீடுகளை நிர்வகிக்கும் இயக்குநரகம் சார்பில் சௌத்ரிக்கு எம்பிக்களுக்கான வீடு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.