சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீர மரணமடைந்த இரு ராணுவ வீரர்களின் உடல்கள் இன்னும் சியாச்சினில் இருந்து எடுத்து வரப்படாததால் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலிக்காக காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சியாச்சின் பனிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பிப்.3-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் கர்நாடகத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா, டி.டி.நாகேஷ், பி.என்.மகேஷ் ஆகிய மூன்று ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது.
ராணுவ வீரர்களின் உடல்களை தேடும்பணி நடந்து வந்தபோது அதிசயத்தக்க வகையில் ஹனுமந்தப்பா உயிருடன்மீட்கப்பட்டார். தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 11.45 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் தார்வாட் மாவட்டம், குந்தகோல் வட்டம், பெட்டதூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
பனிச்சரிவில் மாண்டுபோன கர்நாடகத்தை சேர்ந்த நாகேஷ், மகேஷ் உட்பட 9 வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.
ஆனால், சியாச்சினில் நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர்கள் அங்கு செல்ல முடியாமல், உடல்களை எடுத்து வரும் பணி தாமதமாகி வருகிறது.
இதனால் நாகேஷ், மகேஷின் உருவப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களது உடல்களுக்காக காத்திருக்கும் பரிதாபநிலைக்கு அவர்களது குடும்பத்தினர், கிராமமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.