புதுச்சேரி: புதுச்சேரியில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான சட்டவரையறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டவரையறை உருவாக்கப்பட்டு மத்திய உள்துறை, சட்டம், வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரீசிலித்து அனுமதி தந்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ கடிதம் வந்தவுடன் அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படடும். பின்னர் புதுவையில் ஜல்லிக்கட்டை நடத்தலாம்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. விதிமுறைகளின்படி அவற்றுக்கு மாற்று இடங்கள் தேடும் பணி நடைபெறும்.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் இருந்து ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை எழுந்ததால், முத்தரப்புக் கூட்டம் கூட்டப்பட்டு நவீன மீட்டர் பொருத்தி ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போது ஆட்டோ டிரைவர்கள் அக்கட்டணத்தை வசூலிக்கவில்லை என புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக காவல்துறையினர், போக்குவரத்து துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு காவிரியில் புதுவைக்குரிய 9 டிஎம்சி நீரை தராமல் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பருவமழை பொய்க்கும் காலங்களில் கர்நாடகம், கேரளம், தமிழகம், புதுவை மாநிலங்கள் கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நிபுணர்கள் அடங்கிய காவிரி மேற்பார்வைக்கு குழுவுக்கு புதுவை மாநிலம் சார்பில் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் அனுப்பி உள்ளது. விரைவில் பிரதிநிதிகளை அறிவிப்போம் என்றார் நாராயணசாமி.