புது தில்லி: 21ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வழக்கமான நாளாக இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆரூடம் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் சுதந்தர தின விழாவில் கலந்து கொண்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது 4வது சுதந்தர தின விழா உரையை ஆற்றினார்.
56 நிமிடங்கள் உரை நிகழ்த்திய மோடி, பணமதிப்பிழப்பு, ஆதார், ஜிஎஸ்டி, விவசாயம், கோரக்பூர் என பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது திடீரென ஒரு ஆரூடம் சொன்னார். அதாவது, "21ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வழக்கமான நாளாக இருக்கப் போவதில்லை. அன்றைய தினம் அவர்கள் 18 வயதை பூர்த்தி செய்து, இந்திய குடிமகனாகும் தகுதியைப் பெறுவார்கள்" என்றார்.
21ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள், 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்வார்கள், அவர்கள் 21ம் நூற்றாண்டின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யும் ஆற்றல் பெறுவார்கள். புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் மிக முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
எனவே, இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கவும், இந்தியாவின் மேம்பாட்டில் பங்கேற்கவும் நான் அவர்களை வரவேற்கிறேன் என்று கூறினார்.