புதிய இந்தியாவை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு எடுத்து வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு தீட்டிய நலத் திட்டங்களை உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயக் காப்பீட்டுத் திட்டம், கோதுமை கொள்முதல், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளித்தல், நீர்ப்பாசனத் திட்டத்துக்கு மானியம் போன்ற நடவடிக்கைகள், விவசாயிகளின் முகங்களில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடந்த 4 மாத கால ஆட்சியில், மாநிலம் முழுவதும் 6.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில், யோகி ஆதித்யநாத் அரசு கொண்டுள்ள உறுதியையே இது வெளிப்படுத்துகிறது.
லக்னௌ நகரத்துடன், மாவட்டத் தலைநகரங்களை விமான சேவை மூலம் இணைப்பதால், மாநிலத்தின் வளர்ச்சி மேலும் ஊக்குவிக்கப்படும். அமைச்சரவை கூட்டம் ஒவ்வொரு முறை நடைபெறும்போதும், புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நிஜமாக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, புதிய உத்தரப் பிரதேச மாநிலம் உருவாக வழிவகுக்கும் என்று ராகேஷ் திரிபாதி கூறினார்.