காரைக்குடி: நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய விவகாரத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசு அவசரம் காட்டியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு பொருளாதர நிபுணர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது பணவீக்கத்தை அதிகரிக்கும். மேலும் சிறு, குறு வியாபாரிகளை நலிவடையச் செய்யும்.
முதலில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த வடிவத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நிதானமாக செயல்படுத்தியிருக்க வேண்டும். அத்துடன் முதலில் ஓரிரு மாதங்கள் சோதனை முறையில் அமல்செய்து விட்டு, அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்த பின்னர் குறைகள் களையப்பட்ட பின்னர் முழுமையாக அமல்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த வரி விதிப்பு முறையினால் பெரும்பாலான பொருட்களின் விலை அதிகரித்து, மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சிதம்பரம் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.