ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கு தொடர்பாக அப்பல்கலைக்கழக வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
நஜீப் காணாமல் போனது தொடர்பான வழக்கை கடந்த மே 16}ஆம் தேதி விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேகா சிஸ்தனி, ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ டிஐஜி அந்தஸ்து அதிகாரி கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.
தாய் வாக்குமூலம்: இதைத் தொடர்ந்து, நஜீபின் தாயார் ஃபாத்திமா அண்மையில் சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், 'எனது மகன் நஜீப் விடுமுறைக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 13}ஆம் தேதி வந்தார். கடந்த அக்டோபர் 15}ஆம் தேதி இரவில், நஜீப் என்னை தொலைபேசியில் அழைத்து பல்கலைக்கழகத்தில் பிரச்னையாக உள்ளது என்றார். பின்னர், நஜீப் அறை நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து, எனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து எனது மகனைக் காணவில்லை என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறுகிறது. இது தொடர்பாக தில்லி காவல்துறையில் புகார் தெரிவித்தும் எனது மகனை கண்டுபிடிக்கவில்லை' என கூறினார்.
விசாரணை: இந்நிலையில், நஜீபின் தாயார் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் குழு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்கு திங்கள்கிழமை வந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகி}மந்தவி விடுதியில் நஜீப் அகமதுவுக்கும், ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்றாகக் கூறப்படும் வாக்குவாதம் குறித்தும், அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், 'நஜீப் காணாமல் போனது தொடர்பாக வந்துள்ள புகார்கள், இது தொடர்பாக அவரது தாயார், நண்பர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். நஜீப் விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தினோம்' என்றார்.