கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தொழிலதிபர் இல்லத்தில் யானைத் தந்தம், மான் கொம்பு, சந்தனக் கட்டைகள் ஆகியவற்றை வனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத் துறை குற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கொச்சியில் உள்ள தொழிலதிபர் மணீஷ் குப்தா இல்லத்தில் யானைத் தந்தம், மான் கொம்பு உள்ளிட்டவை இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினோம். அப்போது, யானைத் தந்தம், மான் கொம்பு, சந்தனக் கட்டைகள் ஆகியவை இருந்தன. அவற்றை வைத்திருக்க உரிய ஆவணங்கள் எதுவும் மணீஷ் குப்தாவிடம் இல்லை. எனவே, அவற்றை பறிமுதல் செய்தோம். மேலும், குப்தா இல்லத்தில் சட்டவிரோதமாக இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50 வெளிநாட்டு மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.