பெங்களூரு: கர்நாடக மாநில அரசு நடத்த திட்டமிட்டுள்ள 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கர்நாடக அரசின் சார்பாக அரசன் திப்பு சுல்தானின் நினைவினைப் போற்றும் வகையில் 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கடந்த வருடம் கர்நாடக மாநிலம் குடகில் நடந்த திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களின் பொழுது, இரு வேறு பிரிவினரிடையே மோதல் நடைபெற்றது எனவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு நடத்த திட்டமிட்டுள்ள 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, குடகினைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவானது இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் மற்றும் நீதிபதி தினேஷ் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது அப்பொழுது அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனெரல் சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி மனுதாரர் அரசுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார்.
இறுதியில் மாநில அரசின் 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது. அதேநேரத்தில் இந்த நிகழ்வுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.