முகப்பு
இந்தியா

ஆக்கிரமிப்பு விவகாரத்தில்அமைச்சருக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? அரசைக் கண்டித்த உயர் நீதிமன்றம்!

அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு மட்டும் சிறப்பு சலுகையா என்று கேரள மாநில அரசை, அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

Updated On : 8 நவம்பர், 2017 at 3:55 PM
பகிர்:

கொச்சி: அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு மட்டும் சிறப்பு சலுகையா என்று கேரள மாநில அரசை, அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

கேரளாவை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் தாமஸ் சாண்டி. இவருக்குச் சொந்தமான வாட்டர் வோர்ட் டூரிசம் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் ஆலப்புழாவில் உள்ள புகழ்பெற்ற நீர்ப்பகுதியில் ஆற்றோர  ரிஸார்ட்டுகளை காட்டியுள்ளது. இந்த ரிஸார்ட்டுகளை முக்கிய சாலையுடன் இணைப்பதற்கு என வயல்வெளிகளை அழித்து சாலைகளை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நிலமானது விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக முதன் முறையாக திருச்சூரைச் சேர்ந்த உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான முகுந்தன் என்பவர் கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

Advertisement

அதில் அமைச்சரின் நிறுவனத்தின் இந்த செயல்பாடுகள் மூலம் கேரள அரசின் நிலப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கேரள அரசின் விவசாய மற்றும் நிலப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகள் வெளிப்படையாக மீறப்பட்டிருப்பது தெரிகிறது. இது தொடர்பான ஆதாரங்களை அளித்த பின்னரும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் மீதும், அந்நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்று கூறியிருந்தார். அத்துடன் மேலும் சில வழக்குகளும் அமைச்சர் மீதும், அந்நிறுவன இயக்குனர்கள் மீதும் தொடரப்பட்டன.

இந்நிலையில் முகுந்தன் தொடந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது நீதிபதிகள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆலப்புழா மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் முதன் நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட நிலத்தினை அளவீடு செய்வதும் அடங்கும். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே முறையாக துவங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:       

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் அமைச்சருக்கு மட்டும் சிறப்பு சலுகையா? அரசு இந்த விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை. பொதுவாகவே சாமானியர்கள் யாரவது அரசு நிலத்தினை நில ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார் என்றால், விசாரணை செய்து உடனடியாக ஆக்கிரமிப்பை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுவதுதான் வழக்கம்.  ஆனால் இந்த விசாரணை  திருப்தியளிக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கலாமா என்ற கேள்வியை கேரளா மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி முன்வைத்து, வழக்கினை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.