ஜேஎன்யுவில் இடஒதுக்கீடு விவகாரம்: ஜாவடேகருக்கு எம்.பி.க்கள் கடிதம்
தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கொள்கையில் விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலையிடுமாறு
தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கொள்கையில் விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30-க்கும் அதிகமான எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஜாவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜேஎன்யுவில் மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுகிறதா? என்பதை கண்டறிவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டில் குழு ஒன்றை ஜேஎன்யு அமைத்தது.
மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படாமல் தவிர்ப்பதற்கு நேர்முகத்தேர்வில் நடைமுறையில் உள்ள 30 மதிப்பெண்களை 15-ஆகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. இது, கடந்த 1989-ஆம் ஆண்டு எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006, ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே, இடஒதுக்கீடு பலன்களை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவைக்கு ஜேஎன்யு மாணவர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியிருந்தது.
அந்தச் சங்கத்தின் தலைவர் கீதா குமாரி கூறுகையில், 'ஜேஎன்யுவில் சேர்வதற்கு முன்பு எழுத்துத் தேர்வு மூலம் 70 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வு மூலம் 30 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இரு தேர்வுகளிலும் எடுக்கும் மதிப்பெண்களை சேர்த்து மதிப்பிட்டு இனி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இடஒதுக்கீடு பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.