மாநிலங்களவையில் தவறான தகவல் வெளியீடு: திருத்தம் செய்த வெங்கய்ய நாயுடு
ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவற்றப்பட்டுவிட்டதாக மாநிலங்களவையில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை
ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவற்றப்பட்டுவிட்டதாக மாநிலங்களவையில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவைக் குறிப்பில் இடம்பெற்றிருந்த அதுதொடர்பான தகவல்களை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திருத்தம் செய்தார். ஊழல் தடுப்பு மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் இருந்த சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து பரிசீலனைக் குழுவின் பார்வைக்கும் அந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 4 ஆம் தேதி அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் இதுதொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை ஒழுங்கு பிரச்னை எழுப்பினார். குரியன் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமன்றி, மத்திய அமைச்சர்கள் சிலரும் இதேபோன்று தவறான தகவல்களைத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, அவரது கோரிக்கையைப் பரிசீலித்த குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, அவையில் இதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது என்றும் ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், அவைக் குறிப்பில் அதுதொடர்பாக தவறாக இடம்பெற்றிருந்த தகவலையும் அவர் திருத்தியமைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.