ரூ.2,654 கோடி மோசடி: குஜராத் நிறுவன அதிபர்கள் கைது
வங்கியில் ரூ.2,654 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான வழக்கில், குஜராத் மாநிலம், வதோராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்ஷர் (டி.பி.ஐ.எல்.) நிறுவனத்தின் அதிபர்களை
வங்கியில் ரூ.2,654 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான வழக்கில், குஜராத் மாநிலம், வதோராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்ஷர் (டி.பி.ஐ.எல்.) நிறுவனத்தின் அதிபர்களை சிபிஐ புதன்கிழமை கைது செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் பிரமோட்டராக சுரேஷ் நரேன் பட்னாகரும், இயக்குநர்களாக சுரேஷ் நரேனின் மகன்கள் அமித், சுமித் ஆகியோரும் இருக்கின்றனர். இந்நிலையில், டி.பி.ஐ.எல். நிறுவனமானது 11 வங்கிகளைக் கொண்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்) கூட்டமைப்பிடம் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து கடன் வாங்கி வந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி நிலவரப்படி, இந்த கடன் தொகையானது ரூ.2,654 கோடியாக இருந்தது. அந்தத் தொகையை டி.பி.ஐ.எல். நிறுவனம் திருப்பி அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் பிரமோட்டர் சுரேஷ் நரேன், இயக்குநர்கள் அமித், சுமித் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் மூவருக்கு எதிராகவும் பிணையில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் அவர்கள் 3 பேரும் இருப்பதாக சிபிஐ-க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, உதய்ப்பூர் சென்று, 3 பேரையும் சிபிஐ கைது செய்தது என்று சிபிஐ தரப்பில் குறிப்பிடப்பட்டது.
குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை தரப்பில், 'சுரேஷ் நரேன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்ய சிபிஐ எங்களது உதவியை கோரியிருந்தது; இதைத் தொடர்ந்து, உதய்ப்பூர் ஹோட்டலில் மூவரும் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினரும், சிபிஐ அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை இரவு சென்று, அவர்களைக் கைது செய்தனர்' என்று தெரிவிக்கப்பட்டது.