ஐஸாவல்: நடைபெற்று முடிந்த மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 26 இடங்களில் வென்று மிஸோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரியா சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரிதிப் பெரும்பான்மையைப் பிடிக்க நெருக்கடி நிலை நிலவுகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 26 இடங்களில் வென்று மிஸோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
காலை 8 மணிக்குத் துவங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மாலை 5 மணிக்கு முழுமையாக வெளியாகின. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் மிஸோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
மிஸோரமில் முதன்முறையாக ஒரு இடத்தில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கணக்கைத் துவக்கியுள்ளது.