கொல்கத்தா: வறுமையால் சூழப்பட்ட நிலையில் தனது 75 வயதிலும் பிச்சை எடுத்து பெண்மணி ஒருவர் கழிவறை கட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளது தவுலத்தாபாத் நகரம். இதற்கு அருகில் உள்ள சிறிய கிராமம் நவுதாபரா. இங்கு வசிப்பவர் ரஹிமா பேவா. 75 வயது மூதாட்டி. இவரது கணவர் தின் முஹம்மது 20 வருடங்களுக்கு முன்னதாக மரணமடைந்த பின்னர், இவரது மூன்று மகனகளும் சேர்ந்து கொண்டுஇவரை வீட்டில் இருந்து துரத்தி விட்டனர்
அதன் பின்னர் மாற்றுத் திறனாளியான இவரது மகள் கமலா கதுன் (40) உடன் அவர் தனியாக வசித்து வருகிறார். வருமானத்திற்கு வேறு வழியில்லாத காரணத்தால், அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன் முலமே அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
இந்நிலையில் வறுமையால் சூழப்பட்ட நிலையில் தனது 75 வயதிலும் பிச்சை எடுத்து ரஹிமா கழிவறை ஒன்றை தனது குடிசை வீட்டின் பின்பகுதியில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் எங்கள் வாழ்க்கை முழுவதுமே திறந்த வெளியில்தான் மலம் கழித்து வருகிறோம். சில அரசு அதிகாரிகள் திறந்த வெளியில் மலம் கழிப்பது எங்ககளது உடல் நலத்திற்கு கேடு என்பதை தொடர்ந்து வலியுறுத்தினர். அத்துடன் இது போன்று இயற்கை அழைப்பை திறந்த வெளியிலக்கழிப்பது என்பது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாதது என்பதால், எனது வீட்டில் ஒரு கழிவறை கட்ட வேண்டும் என்று விரும்பினேன்.
மத்திய அரசின் 'ஸ்வச் பாரத்' திட்டத்திற்கு பதிலாக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் 'நிர்மல் பங்களா' திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கழிவறை கட்ட ரூ.10000 நிதி வழங்கப்படும். அவர்கள் தங்கள் பங்காக ரூ.900 மட்டும் செலுத்தினால் போதும். ஆனால் ரஹிமாவின் மூன்று மகன்களும் இந்த நிதியினையும் ஏமாற்றி பெற்று விட்டனர்.
எனவே தான் விரும்பியபடி ஒரு கழிவறை கட்ட ரஹிமாவுக்கு ரூ.15000 தேவை. அதில் ரூ. 2000 தொகையினைச் செலுத்தி தற்பொழுது அவர் பணியினைத் துவங்கியுள்ளார்.அது முழுவதும் பிச்சை எடுத்து பெறப்பட்ட தொகை என்பது கவனிக்கத்தக்கது.
பிச்சை எடுத்தாவது ஒரு கழிவறை கட்ட வேண்டும் என்ற வரத்து தளரா முயற்சியினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.