கும்பல் கொலை விவகாரம் ராஜஸ்தான் அரசுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 28-இல் விசாரணை
ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் கும்பல் கொலை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது
ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் கும்பல் கொலை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
அல்வர் மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி பசுக்களை கடத்திச் சென்றதாக சந்தேகித்து ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி பத்திரிகையாளர் துஷர் காந்தி, காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும், இதுபோன்ற கும்பல் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.
எனவே, அல்வர் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து, ராஜஸ்தான் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுக்களையும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அமர்வு கூறியது.
நாடெங்கிலும் பல மாநிலங்களில் அடுத்தடுத்து கும்பல் கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, அவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அத்துடன், கும்பல் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறு நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில்...: இதனிடையே, மக்களவையில் திங்கள்கிழமை அலுவல்களின்போது காங்கிரஸ் எம்.பி. கரன் சிங் யாதவ், அல்வர் சம்பவம் குறித்துப் பேசினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.