பிடிபி துணைத் தலைவர் பதவி: மெஹபூபா உறவினர் ராஜிநாமா
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) துணைத் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் உறவினரான சர்தாஜ் மத்னி திடீரென அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) துணைத் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் உறவினரான சர்தாஜ் மத்னி திடீரென அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பிடிபி கட்சியில் மெஹபூபா முஃப்தியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இம்ரான் அன்சாரி உட்பட பல எம்.எல்.ஏ-க்கள் 3 வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் பிடிபி துணைத் தலைவர் பதவியில் இருந்து சர்தாஜ் மத்னி விலகியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எனது ராஜிநாமா கடிதத்தை மெஹபூபா முஃப்தியிடம் (பிடிபி கட்சித் தலைவர்) சமர்ப்பித்து விட்டேன். கட்சியின் நலன் கருதியும், கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில், பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனிடையே, பிடிபி கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள், 2 எம்எல்சிக்கள், கட்சியில் உறவினர்களுக்கு மெஹபூபா முஃப்தி முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்து, அவருக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் பிடிபி கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையிலேயே, துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளீர்களா? என்று மத்னியிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.