புதுதில்லி: வாகன விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு மின்னணு முறையில் அபராதம் விதிக்க ஏதுவாக அடுத்த மாதம் முதல் போக்குவரத்து காவல்துறைக்கு கையடக்க கருவியை வழங்க தில்லி போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
தில்லியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது தில்லி போக்குவரத்து துறையின் அமலாக்க பிரிவான தில்லி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது சலான் வழங்கி அபராதம் விதிக்கும் நடைமுறையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நவீன முறையில் அதாவது மின்னணு முறையில் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது, கையடக்க கருவி மூலம் மின்னணு முறையிலான அபராத வசூலிப்பில் வெளிப்படைத்தன்மை இருக்கும். மேலும், அபராதத்தை டெபிட் கார்டு மூலம் உடனடியாக செலுத்தும் வசதியும் உள்ளது. மேலும், அபராதம் வசூலிக்கும் போலீஸார் உடலில் பொருத்தும் வகையில் கேமரா வழங்கப்பட உள்ளன.
இதன்மூலம், விதிமீறலில் ஈடுபட்டு பிடிபடும் வாகன ஓட்டியுடன் போக்குவரத்து போலீஸார் உரையாடும் காட்சி வாகன கட்டுப்பாட்டு பிரிவுக்கு நேரலையாக கிடைக்கும் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை சமீபகாலமாக அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.