புதுதில்லி: காங்கிரஸ் நடத்தும் இஃப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, அவர் சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றது காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 13 ம் தேதி புதுதில்லியில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். ஏறத்தாழ இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இந்த இப்தார் விருந்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது புகழ்பெற்ற தாஜ் பேலஸ் ஒட்டலில் நடைபெற்ற உள்ளது. இதில் கலந்து கொள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பட்டு உள்ளது
இந்நிலையில் நிகழ்வுக்கான விருந்தினர் பட்டியலில் பல்வேறு முக்கிய நபர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தனியார் தொலைகாட்சி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சிலநாட்களுக்கு முன்னதாக நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட காரணத்தால்தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.