ஸ்ரீநகர்: தனது அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, தனது பதவியினை ராஜிநாமா செய்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 87 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும், பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இதுவரை கூட்டணியிலிருந்து ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பாஜக தற்போது கூட்டணியில் இருந்து விலகியிருப்பதால், மக்கள் ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர். எனவே, காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து ஆதரவு தந்தால் ஜம்மு காஷ்மீர் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தனது அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, தனது பதவியினை ராஜிநாமா செய்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனது அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து வேறு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
தனது ராஜிநாமா கடிதத்தினை அவர் மாநில ஆளுநர் வோராவுக்கு அனுப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பத்திரிகையாளர்களை செவ்வாய் மாலை 6 மணிக்கு சந்திக்கவுள்ள அவர் தற்போதைய சூழல் குறித்து விரிவாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.