முகப்பு
இந்தியா

மீசையைப் பிடுங்கி...சிறுநீரைக் குடிக்க வைத்து: தலித் சமூக விவசாயக் தொழிலாளிக்கு நேர்ந்த கொடுமை 

நிலத்தில் வேலை செய்ய இயலாது என்று கூறிய தலித் சமூக விவசாய தொழிலாளி மீசையைப் பிடுங்கி, அவரை சிறுநீரைக் குடிக்க வைத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. 

Updated On : 1 மே 2018, 8:12 pm IST
பகிர்:

பதுன்(உ.பி): நிலத்தில் வேலை செய்ய இயலாது என்று கூறிய தலித் சமூக விவசாய தொழிலாளி மீசையைப் பிடுங்கி, அவரை சிறுநீரைக் குடிக்க வைத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் பதுன் மாவட்டம், ஆசம்பூர் பிசாலுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் வால்மீகி. இவர் தலித் சமூகத்தினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 24-ம் தேதி வேறு ஒருவரின் நிலத்தில் கோதுமை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆசம்பூர் விசாருயா கிராமத்தைச் சேர்ந்த விஜய் சிங், சைலேந்திர சிங், விக்ரம் சிங் மற்றும் பிங்கு சிங் ஆகிய உயர் சாதி வகுப்பினர், தங்கள் நிலத்தில் கோதுமையை அறுவடை செய்ய வருமாறு வால்மீகியை அழைத்துள்ளனர்.

Advertisement

அதற்கு வால்மீகி கூலியாக மாட்டுத்தீவனம் கேட்டுள்ளார். ஆனால்,அதற்கு அவர்கள் மறுக்கவே தன்னால் வர இயலாது என்று வால்மீகி தெரிவித்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த 4 பேரும், வால்மீகியைத் தாக்கி, அவரின் மீசையை வலுக்கட்டாயமாக கையால் பிடுங்கி உள்ளனர், அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஷூவில் சிறுநீர் கழித்து அதை வால்மீகியின் வாயில் ஊற்றிக் குடிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அவமானத்திற்கு ஆளான வால்மீகி ஹஸ்ரத்பூர் போலீஸ் நிலையத்தில் அந்த 4 பேர் மீதும் புகார் செய்தார். ஆனால், அந்தப் புகாரை வாங்காமல் போலீஸ் நிலைய அதிகாரி அலைய விட்டுள்ளார். பின்னர் வால்மீகியின் மனைவி மாவட்ட போலீஸ் எஸ்.பிஅசோக் குமாரிடம் புகார் தெரிவித்தபின், அவர் உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய விஜய் சிங், சைலேந்திர சிங், விக்ரம் சிங், பிங்கு சிங் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன் வால்மீகியின் புகாரைப் பெறாமல் அலைக்கழிப்பு செய்த நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.