புது தில்லி: படேல் உருவாக்கிய அமைப்புகளை சிதைத்து விட்டு அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உலகின் மிகப் பெரிய சிலையாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட (93 மீட்டர்) இரு மட ங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் கரையோரத்தில் சர்தார் சரோவர் அணை அருகில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை நாட்டுக்கு அர்பணிக்கும்போதும், அதன் அருகே, வால் ஆஃப் யூனிட்டியும் (ஒற்றுமையின் சுவர்)-திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பின்போது இந்திய விமானப் படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில் படேல் உருவாக்கியா அமைப்புகளை சிதைத்து விட்டு அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
படேல் உருவாக்கிய அமைப்புகளை எல்லாம் சிதைத்து விட்டு அவருக்கு சிலை அமைக்கப்படுவது நகைமுரணாக உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்களை எல்லாம் திட்டமிட்டு அழிப்பது என்பது துரோகத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.
படேல் ஒரு தேசபக்தர். ஒன்றுபட்ட, மத்சசார்பற்ற சுதநதிர இந்தியாவுக்காக போராடியவர். எஃகு போன்ற மன உறுதியும், அதனள்ளே இரக்கமும் நிரம்பியவர். விடாப்பிடித்தனத்தையோ அல்லது வகுப்புவாதத்தையோ சகித்துக் கொள்ளாதவர். இந்தியாவின் சிறந்த புதல்வருக்கு அவரது பிறந்த நாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.