காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும். தேச விரோத சட்டம் நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசத்துரோக தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதியை ஏற்க முடியாது.
நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காதது காங்கிரஸ் கட்சி. இது ராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலாகும். நமது பாதுகாப்புப் படையை பலவீனப்படுத்தும் இச்செயல் சரியானது தானா? என்று கேள்வி எழுப்பினார்.