முகப்பு
இந்தியா

நடிகை ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி தலைவர்: சுஷ்மா கடும் கண்டனம் 

நடிகை ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி தலைவர் ஆசம் கானின் பேச்சுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஏப்ரல், 2019 at 4:37 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:10 PM

புது தில்லி: நடிகை ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி தலைவர் ஆசம் கானின் பேச்சுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.  பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகினார். பின்னர் சமாஜ்வாதிக்கட்சியில் சேர்ந்த அவர், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அக்கட்சி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக முக்கியத் தலைவரான ஆசம் கான் அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தார். ஆனால் 2010 -ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயப்பிரதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த அவர் சமீபத்தில் பாஜ கட்சியில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு மீண்டும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரை அங்கு வளர்த்து விட்ட சமாஜ்வாதிக் கட்சியின் முக்கியத் தலைவர் ஆசம் கானை  எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி தலைவர் ஆசம் கானின் பேச்சுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஆசம் கான் நேரடியாக ஜெயப்ரதாவின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியதாவது:

நான்தான் அவரை ராம்பூருக்கு கொண்டு வந்தேன். இங்குள்ள ஒவ்வொரு தெருவையும் வீதிகளையும் அவருக்கு அறிமுகப்படுத்தினேன் அவரை யாரும் தொட விட்டது கிடையாது.

நீங்கள் அவரை உங்களின் 10 வருடங்களாக உங்களின் பிரதிநிதியாகி தேர்தெடுத்தீர்கள்.   அவரின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ள உங்களக்கு 17 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் எனக்கு நிஜ வாழ்வில் 17 நாட்களே போதுமானதாக இருந்தது. உள்ளே இருக்கும் அவரது ஆடையின் நிறம் காவி என்பது தெரிந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயமைக் குறிப்பிட்டு, திங்களன்று  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.

சகோதரர் முலாயம் அவர்களே! நீங்கள் தற்போது சமாஜ்வாதி கட்சியின் பீஷ்மர் போல் உள்ளீர்கள். உங்கள் கண்முன்னால் ராம்பூர் திரவுபதியின் ஆடை துகில் உரியப்படுகிறது. மகாபாரத பீஷ்மர் போல் அமைதியாக இருந்து விடாதீர்கள்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

அதேசமயம் ஆசம் கானின் பேச்சுக்கு விளக்கம் கோரி தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஜெயப்பிரதா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு தலைவரான பெரோஸ் கான், 'நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுவதால் அத்தொகுதி மக்களுக்கு இனி மாலைப் பொழுதுகள் இனிமையாக கழியும்' என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.