காசிப்பூர்: தீவிரவாதிகள் உங்கள் உறவினர்களா? என்று எதிர்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மாயாவதி மற்றும் அகிலேஷ் சிங் யாதவை நோக்கி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் வியாழனன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்தியா வான்வழித் தாக்குதல்கள் நிகழ்த்திய போது ஒட்டுமொத்த தேசமே கொண்டாடியது. ஆனால் இரண்டு இடங்களில் மட்டும் வருத்தம் நிலவியது. அதில் ஒன்று பாகிஸ்தான மற்றது ராகுல், மாயாவதி மற்றும் அகிலேஷ் சிங் யாதவின் அலுவலகங்கள ஆகும்.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் கொல்லப்பட்டால்;அவர்கள் ஏன் வருத்தப்படுகிறார் என்று எனக்குப் புரியவே இல்லை. தீவிரவாதிகள் உங்கள் உறவினர்களா?
நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். நரேந்திர மோடிதான் எங்கள் பிரதமர். நாங்கள் தீவிரவாதிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பபுடன் யாரும் விளையாட முடியாது.
இந்தியாவிற்கு இரண்டு பிரதமர்கள் தேவை என்ற ஒமர் அப்துல்லாவின் கருத்திற்கு ராகுலின் பதில் என்ன என்று நான் கேட்டு இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. அவரிடம் பதில் இல்லை. அவர் வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்.
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, அதன் ஒரு தொண்டர் இருக்கும் வரை, காஷ்மீரை இந்தியாவை விட்டுப் பிரிக்க முடியாது. பிரிவினை கோஷங்கள் எழுப்புபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.