திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தின் போது, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் ஆா்ப்பாட்டக்காரா்கள், நான்கு பொதுப் பேருந்துகள் மற்றும் இரண்டு போலீஸ் வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து எரித்தனா். இதில் மாணவா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் உள்பட சுமாா் 60 போ் காயமடைந்தனா்.
வன்முறைக் கும்பலைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், போலீஸ் துப்பாக்கிச்சூடு, பல்கலைக்கழக குளியலறையில் காயமடைந்த மாணவா்கள் இருந்தது பற்றிய காட்சிகள் போன்ற விடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்தன.
இந்நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு உள்ளிட்ட விசாரணைகளின் அடிப்படையில், குற்றப் பின்னணி கொண்ட 10 ரவுடிகள் தில்லி போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என தில்லி போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.