மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் விவகாரத்தில், தனது தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
மஜத எம்எல்ஏ நாகனகெüடாவின் மகன் சரண்கெüடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பான ஒலிப்பதிவு துணுக்கை வெளியிட்டபோது, அது உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், தனது குரலை போலியாகத் தயாரித்து ஒலிப்பதிவு துணுக்கை வெளியிட்டதாக எடியூரப்பா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நாகனகெüடாவின் மகன் சரண்கெüடாவுடன் தான் பேசியது உண்மைதான் என்று எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார்.இதன்மூலம் தனது தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மஜதவில் சேர்ந்து ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்று எந்த பாஜக எம்எல்ஏவிடமும் கெஞ்சவில்லை. மேலும், எந்த பாஜக எம்எல்ஏவையும் பணத்தாசை காட்டி பேரம் பேசியதில்லை.
"பாஜக எம்எல்ஏ சுபாஷ்குத்தேதாருக்கு பணம் கொடுக்கிறேன், எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்று நான் என்றைக்கும் கூறியதில்லை. ஒருமுறை என்னிடம் வந்திருந்த சுபாஷ்குத்தேதாரிடம்,"நீங்கள் மஜதவில் இருந்தவர். யாரோ அழைத்தார் என்பதற்காக பாஜகவில் இணைந்துவிட்டீர்கள். மஜதவில் இருந்திருந்தால், இந்நேரம் நீங்கள் அமைச்சராகியிருக்கலாம்' என்று கூறியிருந்தேன். ஆனால், யாருடைய அரசியல் வாழ்க்கையையும் பாழ்ப்படுத்தும் நோக்கம் எனக்கிருந்ததில்லை. நான் தர்மஸ்தலாவில் சனிக்கிழமை அளித்திருந்த பேட்டியை ஒருசில செய்தி ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன.
ஹுப்பள்ளியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாநில முதல்வராக எனக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி வழங்கியுள்ளது. ஆனால், மாநிலத்தின் முதல்வரை அழைக்காமல், மத்திய பாஜக அரசு கீழ்த்தரமான அரசியலை நடத்துகிறது என்றார்.