பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு தனது ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம்-2019க்கு (இட ஒதுக்கீடு மசோதா) குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்; இந்த சட்டம், மத்திய அரசு அறிவிக்கும் நாள் முதல் அமலுக்கு வரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அதை மத்திய அரசு அனுப்பியது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.