அமேதியில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவைத் தொகுதியான அமேதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவைத் தொகுதியான அமேதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதிக்கு புதன்கிழமை வருகை தந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்றனர்.
அமேதிக்கு வருகை தருவது குறித்து ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் அமேதிக்கு வருகை தருகிறேன். என் தொகுதி மக்களுடன் கலந்துரையாட உள்ளேன். அவர்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளேன் என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் வருகை குறித்து, அவரின் பிரதிநிதி சந்திரகாந்த் துபே கூறுகையில், சுற்றுப்பயணத்தின்போது ஃபர்தாஸ்கஞ்ச் பகுதியிலுள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்து உரையாட உள்ளார். மேலும், கெளரிகஞ்ச் பஞ்சாயத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார். ஹலியாபூரில் நடைபெறவுள்ள தெருமுனைக் கூட்டதில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். வியாழக்கிழமை கட்சித் தொண்டர்களை அவர் சந்திக்கிறார் என்றார்.
கடந்த 4-ஆம் தேதியே ராகுல் காந்தி அமேதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.