பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் செய்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை நாங்கள் செய்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாலாகோட் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் தெரிவிக்கையில்,
"பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதி, ராணுவ உதவி அளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் நாடாகவே பாகிஸ்தான் இன்னும் தொடர்கிறது. அரசால் எடுக்க முடியாத நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான யுத்தியாகவே, எந்தவித இடையூறுமின்றி பயங்கரவாதம் தொடர்கிறது.
தற்கொலைப் படை தாக்குதலுக்கான பயிற்சியும், நிதியும் அளிக்கப்படும் மையத்தை தாக்குவதாக முடிவு எடுத்தோம். இவை அங்கிருந்து தான் தொடங்குகிறது என்கிற உளவுத் தகவல் கிடைத்த பிறகு, இதை மேலும் விட்டுவைக்கக்கூடாது என்று பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டோம்.
இது ராணுவ நடவடிக்கை அல்ல. இது பயங்கரவாதிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதை பாகிஸ்தான் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை" என்றார்.