ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான இடைக்கால தடையை ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் முடக்கினர்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதேபோல், அவர்களுக்கு எதிராக சிபிஐயும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இருவரையும் கைது செய்வதற்கான இடைக்கால தடையை மார்ச் 25-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஓ.பி.சைனி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இருவரையும் கைது செய்வதற்கான இடைக்கால தடையை ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.