பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை அவதூறாக விமர்சித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆமதாபாத் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவைச் சேர்ந்த மேயர் கிருஷ்ணவதன் பிரம்பத் என்பவர், ஆமதாபாத் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, கொலைக் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா என்று அழைத்தார். சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில், அமித் ஷாவை சிபிஐ நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுவித்து விட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தபி, வரும் ஜூலை 6-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.