இந்திய பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய பாஜகவின் தவறான கொள்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக நியாய் திட்டம் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான கேசர் ஜஹானை ஆதரித்து பிஸ்வான் நகரில் ராகுல் காந்தி புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு மற்றும் சரக்குசேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகிய இரு நடவடிக்கைகளுமே நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிவிட்டன. ஏழை மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய பாஜகவின் தவறான கொள்கைகளுக்கான ஒரே தீர்வாக காங்கிரஸின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டமான நியாய் திட்டம் இருக்கும்.
மோடி, 15 தொழிலதிபர்கள் கொண்ட குழுவுக்கு ரூ.5.55 லட்சம் கோடி கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் அவர்களிடம் இருந்து அதை திரும்பப் பெற்று, நாட்டில் உள்ள 25 கோடி ஏழைக் குடும்பங்கள் பலனடையும் வகையில் அவர்களுக்கு வழங்க இருக்கிறது. விதைகள், உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது பலனற்றவையாகும்.
அனில் அம்பானி ரஃபேல் ஒப்பந்தம் பெற உதவியதன் மூலம் நமது பிரதமர் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு மோடியைக் கண்டு பயமில்லை. ஆனால், விவாதத்துக்கு வருமாறு அவருக்கு நான் சவால் விடும்போதோ, அவரது அரசின் பல்வேறு துறைகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பும்போதோ மோடி ஒளிந்துகொண்டு விடுகிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மோடியால் கொள்ளையடிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.
வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது சீதாபூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.