மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடிய இந்து மகாசபையைச் சேர்ந்த தொண்டர்கள் 6 பேரை குஜராத் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
முந்தைய பம்பாய் மாகாணத்துக்குள்பட்ட புணே மாவட்டம் பாராமதியில் கடந்த 1910ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி கோட்சே பிறந்தார். குஜராத் மாநிலம், சூரத்தில், அவரது பிறந்த நாளை சூரியமுகி ஹனுமான் கோயில் வளாகத்தில் இந்து மகாசபையைச் சேர்ந்த தொண்டர்கள் கொண்டாடினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து, சூரத் காவல்துறை ஆணையர் சதீஷ் சர்மா திங்கள்கிழமை கூறியதாவது: கோட்சே பிறந்தநாளையொட்டி, கோயில் வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு விளக்கேற்றியும், இனிப்புகளை வழங்கியும், பஜனைப் பாடல்களை பாடியும் இந்து மகாசபைத் தொண்டர்கள் கொண்டாடினர்.
6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நாட்டின் கண்ணியம் மிக்கத் தேசத்தந்தையை கொலை செய்த நபரின் பிறந்தநாளை கொண்டாடியதன் மூலம் குடிமக்களின் மனதை புண்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பொது இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியது, பக்தர்களின் மனதை புண் படுத்தும் வகையில் இடையூறு ஏற்படுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
கோட்சேவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.