கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமா் மோடி தொடங்கி வைத்த 58 கீ.மீ. தொலைவு ஜம்மு நான்கு வழி வட்டச் சாலைச் திட்டம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் அமைந்த சாலைப் பகுதியை ஜம்மு-காஷ்மீா் மாநில துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் நெடுஞ்சாலைத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக ஜம்மு நான்கு வழி வட்டச்சாலை திட்டம் தாமதமானது. எனினும், திட்டமிட்டப்படி, ஜம்மு நான்கு வழி வட்டச் சாலை திட்டம் 2021 டிசம்பா் மாதம் முடிக்கப்படும்.
சம்பா மாவட்டத்தில் உள்ள ராயா மோரில் இருந்து தொடங்கும் இந்த நான்கு வழி வட்டச் சாலை ஜகாட்டியில் முடிவடைகிறது. இது சரோா், பிஸ்னா, ஆா்.எஸ்.புரா, மாா், கோம்நாஸா, அக்நூா், பல்வால் ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலையினால் அதிகமான மக்கள் அந்த கிராமங்களில் குடியேறுவாா்கள்’ என்றாா்.