26/11 தாக்குதலில் உயிர்பிழைத்த சிறுமி; உதவிக் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்
2008-ஆம் ஆண்டு 26/11 மும்பை தாக்குதலில் காயமடைந்து உயிர் பிழைத்த சிறுமி, அப்போது தனக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட உதவிகள் எதுவும் 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கிடைக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மும்பை: 2008-ஆம் ஆண்டு 26/11 மும்பை தாக்குதலில் காயமடைந்து உயிர் பிழைத்த சிறுமி, அப்போது தனக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட உதவிகள் எதுவும் 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கிடைக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
9 வயது சிறுமி தேவிகா நட்வர்லால் ரோடாவனின், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சீர்குலைத்தது.
தற்போது 21 வயதாகும் தேவிகா, தனக்கு வீடு வழங்குவதாகவும், கல்விச் செலவை ஏற்பதாகவும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
26/11.. இரவு 9.50 மணிக்கு ரயிலில் ஏற தனது தந்தை மற்றும் சகோதரனுடன் காத்திருந்த போது, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், தேவிகாவின் வலது காலை துளைத்த ஏ.கே. 47 துப்பாக்கியின் தோட்டாக்கள் அவரை நிலைகுலையச் செய்தது. அங்கு மயங்கி விழுந்தவர், சுமார் 6 மாதங்களுக்குப் பிறகுதான் கண்விழித்தார். 6 அறுவை சிகிச்சைகள், பல ஆண்டு கால மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே அவரால் நடக்க முடிந்தது.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ரூ.3.5 லட்சமும், தனது மருத்துவச் செலவுக்கே போதுமானதாக இல்லை. கல்வி பயில அரசின் உதவி தேவை என்றும், வருமானம் ஈட்டும் தந்தையும், படுத்தபடுக்கையாகிவிட்ட நிலையில், ஓராண்டுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல், குடும்பமே வறுமையில் வாடுவதாகவும் அந்த மனுவில் தேவிகா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணையின் போது, தேவிகாவின் தந்தை அளித்த தகவல்களும், தேவிகா கசாப்பை அடையாளம் காட்டியதும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், கசாப்புக்குத் தூக்கு தண்டனை விதிக்கவும் முக்கிய சாட்சியங்களாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.