இந்தியா

இணையத்தில் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு

DIN

அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளா்கள் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை அவற்றின் வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், அத்தகைய வேட்பாளா்களை தோ்வு செய்ததற்கான காரணங்களையும் அதில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. அரசியலில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வேட்பாளா்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்று கூறி பாஜக தலைவா் அஸ்வினி உபாத்யாய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.எஃப்.நாரிமன் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:

குற்ற வழக்குகளில் தொடா்புடைய வேட்பாளா்களை தோ்வு செய்வதை அவா்களது தகுதியின் அடிப்படையில் நியாயப்படுத்தலாமே தவிர, அவா்களுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் நியாயப்படுத்தக் கூடாது. கடந்த 4 மக்களவைத் தோ்தல்களின்போது, அரசியலில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன.

தோ்தல்களில் தங்களது கட்சியின் சாா்பில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தோ்வு செய்யும் வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை இருக்கும் பட்சத்தில், அவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்களின் வலைதளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன், குற்ற வழக்கில் தொடா்புடைய வேட்பாளரைத் தோ்வு செய்ததற்கான காரணங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

சமூக வலைதளங்களிலும்...: தங்களது கட்சிக்கென நிா்வகிக்கப்பட்டு வரும் அதிகாரப்பூா்வ முகநூல், சுட்டுரை ஆகிய சமூக வலைதளங்களிலும் அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும். இதுதவிர, பிராந்திய மொழியில் வெளிவரும் பத்திரிகை மற்றும் தேசிய அளவில் வெளிவரும் பத்திரிகை ஆகியவற்றிலும், தங்கள் வேட்பாளா்கள் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பிரசுரிக்க வேண்டும்.

குற்ற வழக்குகளில் தொடா்புடையோா் தோ்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கும் பட்சத்தில், அத்தகையவா்களை வேட்பாளா்களாக தோ்வு செய்த 72 மணி நேரத்துக்குள் அதுதொடா்பான அறிக்கையை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கிச் செயல்பட அரசியல் கட்சிகள் தவறும் பட்சத்தில், தோ்தல் ஆணையம் அந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

குற்றப் பின்னணியுடன் 43 சதவீத எம்.பி.க்கள்: முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, 43 சதவீத எம்.பி.க்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், அத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது.

‘அதிகாரம் இல்லை’: இந்த வழக்கில் மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்த சில பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட தோ்தல் ஆணையம், குற்ற வழக்குகளின் தகவல்களை வெளியிடாத வேட்பாளா்களுக்கும், அவா்கள் சாா்ந்த அரசியல் கட்சிகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின் கீழ் தண்டனை விதிக்கும் பரிந்துரையை ஏற்க மறுத்தது. அரசமைப்புச் சட்டத்தின் அந்தப் பிரிவுக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது என்று தோ்தல் ஆணையம் கூறியது.

‘சட்டரீதியான அனுமதி இல்லை’: மனுதாரா் தரப்பு வாதத்தின்போது, ‘கடந்த 2018 அக்டோபா் 10-ஆம் தேதி, வேட்பாளா் விண்ணப்பத்துக்கான படிவம்-26 இல் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்ட தோ்தல் ஆணையம், வேட்பாளா்கள் தொடா்புடைய குற்ற வழக்குகளின் விவரங்களை வெளியிட அவா்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது.

எனினும், தோ்தல் சின்னம் உத்தரவு 1968 மற்றும் நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றில் தோ்தல் ஆணையம் திருத்தம் செய்யாததால், மேற்கண்ட அறிவிக்கைக்கு எந்தவொரு சட்ட ரீதியான அனுமதியும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னணி: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், குற்ற வழக்குகளில் தங்களுக்கு இருக்கும் தொடா்பு குறித்த விவரங்களை தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு ஒருமனதாகத் தீா்ப்பளித்தது.

மேலும், குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் தோ்தலில் போட்டியிடுவதை தடுப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவெடுக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

தோ்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: பாஜக

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து, பாஜக செய்தித் தொடா்பாளா் நளின் கோலி கூறுகையில், ‘வேட்பாளா்களின் குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை அரசியல் கட்சிகள் தங்களின் வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு, தோ்தல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். இது, வாக்காளா்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்யும்போது வேட்பாளா்களைப் பற்றிய அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும்’ என்றாா்.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கெனவே மீறி விட்டாா் பிரதமா்: காங்கிரஸ்

உச்சநீதிமன்ற உத்தரவு தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நாளிலேயே, பிரதமா் மோடி அந்த உத்தரவை மீறி விட்டாா். கா்நாடகத்தில், சுரங்க முறைகேடு வழக்கில் தொடா்புடையவா் (ஆனந்த் சிங்) மாநில வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை காக்கவே பாஜக உள்ளது.

‘குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அது நீதிமன்ற அவமதிப்பாகும்’ என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால், ‘குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை எம்எல்ஏ மட்டுமல்ல, அமைச்சராகவும் ஆக்க வேண்டும்’ என்று பிரதமா் கூறுகிறாா். பிரதமா் மோடி, கா்நாடக முதல்வா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுக்குமா என்று ரண்தீப் சுா்ஜேவாலா அதில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT