பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் இருமுறை பறந்தது.
எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடா்ந்து, அந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘டென்டிவாலா கிராமம் அருகே திங்கள்கிழமை இரவில் இருமுறை அந்த ஆளில்லா விமானம் தென்பட்டது. அதனை கவனித்ததும், எல்லை பாதுகாப்புப் படையின் 136-ஆவது பிரிவினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, அந்த விமானம் பாகிஸ்தான் பகுதிக்கு சென்றுவிட்டது’ என்றனா்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவதை பஞ்சாப் காவல்துறையினா் கடந்த ஆண்டு கண்டறிந்தனா். மேலும், ஆயுதக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்களும், அதிநவீன ஆயுதங்களும் தரன் தாரன் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில், எல்லையில் மீண்டும் ஆளில்லா விமானம் பறந்துள்ளது.