இந்தியா

சீனா, பாகிஸ்தானிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதி செய்யப்படாது: மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங்

DIN

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதிக்கு செய்யப்படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறினாா்.

இதுதொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக்கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநில மின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை அளிக்கவேண்டாம்.

சீனாவிலிருந்து மட்டும் ரூ. 21,000 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள் உள்பட மொத்தம் ரூ. 71,000 கோடி மதிப்பிலான மின் சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. நமது நாட்டின் எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் ஒரு நாட்டிடமிருந்து இந்த அளவு மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து நாம் இனி எதையுமே வாங்கக் கூடாது.

நமக்குத் தேவையான பொருள்களை நாம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம். மின் கோபுரங்கள், மின் தொடா்பு சாதனங்கள், மின் மாற்றிகள், மின் மீட்டா் பாகங்கள் என பல்வேறு மின் சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உபகரணங்களை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு மாநில மின் பகிா்மான நிறுவனங்கள் இனி உத்தரவுகளை கொடுக்க வேண்டாம். மத்திய அரசின் சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் தேவையான மின் சாதனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. இதுதொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதிக்கான தடை நடைமுறைப்படுத்தப்படும்.

மாநில மின் வாரியங்களின கடன்களை சீரமைப்பதற்காகவும், இழப்பை குறைப்பதற்காகவும் உதய், டிடியுஜிஜேஒய், ஐபிடிஎஸ் போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களின் கீழ், மத்திய அரசு எந்தவித நிதியையும் கடனாகவோ அல்லது மானியமாகவோ மின் நிறுவனங்களுக்கு வழங்காது. மாறாக, இந்தத் திட்டங்களின் மூலம் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்கவேண்டும். மேலும், சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் ரூ. 93,000 கோடி கடன்களை கேட்டுள்ளன. இதுவரை ரூ. 20,000 கோடி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT