கரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் திடீர் மனஅழுத்தத்தால் 43% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதனையொட்டி, மக்கள் அனைவரும் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். நீண்ட நாட்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் பொதுமக்கள் பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் சிக்கியுள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 43% பொதுமக்கள் மனஅழுத்தத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆய்வுத் தரவுகளின்படி, 26 சதவிகிதத்தினர் லேசான மனச்சோர்விலும், 11 சதவிகிதத்தினர் மிதமான மனச்சோர்விலும், 6 சதவிகிதத்தினர் கடுமையான மனஅழுத்தத்திலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
5 மாத கால ஊரடங்கில் திடீரென ஏற்பட்ட வாழ்நிலை மாற்றம், வேலையிழப்பு, உடல்நிலைக் காரணங்கள் போன்றவை மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்களாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.