பிரான்ஸிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் இந்தியா வந்தடைகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 36 அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
ரூ.60 ஆயிரம் கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்படுகின்றன. பிரான்ஸிலிருந்து கிளம்பிய விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்கப்பட்டு பின் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடுவானில் பிரான்ஸ் விமானத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டது.
வானிலை பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் ரஃபேல் விமானங்கள் ஜோத்பூர் விமான தளத்தில் தரையிறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி பாதுரியா 5 ரஃபேல் போர் விமானங்களையும் அம்பாலா விமானப் படை தளத்தில் வரவேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் இணைய இருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் நாட்டிற்கு கூடுதல் பலமாக அமையும் என நம்பப்படுகிறது.