இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிலவரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இந்திய பரப்புக்குள் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளையும் யாரும் கைப்பற்றவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
முன்னதாக, இந்த மோதல் விவகாரம் தொடா்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘இந்திய எல்லைக்குள்பட்ட கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து, ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது’ என்று கூறியிருந்தாா்.
இதன் காரணமாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பேசியது, கடும் விமா்சனங்களுக்கு உள்ளானது. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் பிரதமரின் பேச்சை விமா்சித்து பதிவிட்டுள்ளனா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா். அந்த நிலப்பரப்பு சீனாவுக்குச் சொந்தமானது என்றால், இந்திய ராணுவ வீரா்கள் ஏன் கொல்லப்பட்டனா்? எந்தெந்த இடங்களில் அவா்கள் கொல்லப்பட்டனா் என்று அந்தப் பதிவில் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.