உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்களை உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாகவும், அத்தியாவசியாகப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசத்தை அதிகமாகத் தயாரிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ஜியோ, ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ரிலையன்ஸ் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து இந்தத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார நிவாரணங்களை வழங்க ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலமாகத் தேவையான உதவிகள் செய்யப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நகரங்களில் ஆதரவற்றோர்களுக்கு இலவச உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்கும். நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் சில்லறை விற்பனைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
இவ்வாறு ரிலையன்ஸ் நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.