முன்களப் படைகளைக் கட்டுப்படுத்தவும்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
எல்லையில் சீனப் படைகளின் சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லையில் சீனப் படைகளின் சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:
"சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை தூதரக மூலமாகவும், ராணுவம் மூலமாகவும் சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளோம். இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவின் முன்களப் படைகளை ஒழுங்குபடுத்தியும் கட்டுப்படுத்தியும் வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அனைத்துப் பிரச்னைகளையும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா-சீன எல்லையில் நிலவும் சூழலை கடந்த 3 மாதங்களாக இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தப் புரிதல்களை மீறும் வகையில், ஆகஸ்ட் 29/30 இரவில் சீனத் தரப்பு ஆத்திரமூட்டும் வகையில் ராணுவ சூழ்ச்சியில் ஈடுபட்டது.
இந்திய ராணுவம் நேற்று குறிப்பிட்டதைப்போல், சீனத் தரப்பின் செயலுக்கு இந்தியத் தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டது. பிராந்திய ஒருமைப்பாட்டையும், நமது நலன்களையும் பாதுகாக்க இந்தியத் தரப்பில் உகந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆகஸ்ட் 31-ம் தேதி பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக இருநாட்டு படைத் தளபதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும், சீனப் படைகள் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால், ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்றும் முயற்சி இந்தியத் தரப்பால் முறியடிக்கப்பட்டது."