புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு எதிராக முகநூலில் வெளியாகும் அவதூறான தகவல்களுக்கு, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் துணை போகின்றனர் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்கிற்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் உள்ள உங்கள் நிறுவனத்தில் முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும் ஊழியர்களே துணை போகின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு ஆதாரங்கள் உள்ளன.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பல பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
‘வலதுசாரி சிந்தாந்தம்’ கொண்டவர்களின் பக்கங்களை நீக்குவது அல்லது அவற்றின் வரம்பு குறைக்கப்பட்டதாக அவர் புகார் கூறியுள்ளார். முகநூல் வாயிலாக சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.
முகநூலில் உண்மைக்கு எதிரான செய்திகள் மட்டும் வெளியே கசியவிடப்படுகின்றன. இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது.
ஒரு நாடு கடந்த டிஜிட்டல் தளமாக, முகநூல் நியாயமானதாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பாஜகவுக்கு எதிரான பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ள நிலையில், முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.