வேளாண் மசோதாக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா 2020, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மசோதாக்கள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தாக்கல் செய்யப்பட்டன. இதில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்குப் பிறகு இரண்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால், மசோதாக்களை தாக்கல் செய்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவி வருவது உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி வேளாண் மசோதாக்களை எதிர்க்க முடிவு செய்துள்ளது. அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்காவது அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.