ரயில் பயணிகளுக்கு புதிய வசதி: பக்கவாட்டு கீழ் படுக்கையில் மாற்றம் (விடியோ)
விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களைப் பொறுத்தவரை மற்ற ஏனைய போக்குவரத்தை விடவும் ரயில் போக்குவரத்து மிகவும் வசதி என்று கருதுவார்கள். அதிலும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு ரயில் பயணம்தான் மிகவும் ஏற்றது.
அதிலும் கீழ் படுக்கை வசதி இருக்கையை முன்பதிவு செய்ய ரயில் பயணிகளுக்கும் மிகவும் விருப்பம் உண்டு. ஆனால், அந்த இருக்கை வசதி பெரும்பாலும் கிடைப்பது அரிது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சில பயணிகளுக்கே அது பெரும்பாலும் ஒதுக்கப்படும்.
Advertisement
இதையும் படிக்கலாமே.. கைலாசாவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து விமான சேவை: நித்யானந்தா அறிவிப்பு
கீழ் படுக்கை வசதியை பெரும்பாலானோர் விரும்பினாலும் ஒரு ரயில் பெட்டியின் பக்கவாட்டு கீழ் படுக்கை வசதியை பலரும் விரும்புவதில்லை. காரணம், அதன் அமைப்பு.
இரண்டு இருக்கைகளை பிரித்துப் போட்டு, அதனை படுக்கை வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் என்ன சிரமம் என்றால், இரண்டு தனித்தனி இருக்கைப் பகுதிகளை சேர்த்துப் போட்டு படுக்கும் போது, அதில் பிடிமானம் இல்லாததும், இரண்டு இருக்கைகளை ஒன்றாக சேர்க்கும் போது நடுவில் ஒரு சின்ன இடைவெளி இருப்பதும், அதனால் உடல் சமநிலையில் இல்லாமல் உறக்கம் வராமல் தவிப்பதுமே காரணமாக இருந்தது.
ஆனால், இந்த தவிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு இருக்கைகளை இணைத்துப் போட்டுவிட்டு, அதன் மேல் வேறொரு படுக்கை விரிப்பை போடும் வசதியை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் சுட்டுரைப் பக்கத்தில் விடியோவுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இனி, ரயிலில் பயணிக்கும் போது பக்கவாட்டு கீழ் படுக்கை வசதி கிடைத்த பயணிகளும், மற்றப் பயணிகளைப் போலவே நிம்மதியாக உறங்கி தங்களது பயணத்தை வண்ணக் கனவுகளுடன் நிறைவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.