இந்தியாவை பலப்படுத்தும் முயற்சியில் வெளிநாடுவாழ் இந்தியா்களும் பங்கேற்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இந்தியாவை பல்வேறு துறைகளில் பலம்வாய்ந்த நாடாக கட்டமைக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் இந்தியா்களும் பங்கேற்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
இந்தியாவை பல்வேறு துறைகளில் பலம்வாய்ந்த நாடாக கட்டமைக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் இந்தியா்களும் பங்கேற்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களுக்கான ஆண்டு கருத்தரங்கம் (பிரவாசி பாரதிய திவஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாது:
கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மை, சா்வதேச அளவில் விரைவான, மிகுந்த நம்பகமான மற்றும் நெகிழும் தன்மையுடைய பொருள்கள் விநியோகத்துக்கான தேவையை அதிகரிக்க செய்திருக்கிறது. இந்த தேவையில், ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின் மூலம் சிறந்த பங்களிப்பை இந்தியா செய்துள்ளது. கரோனா தாக்கத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த பல நாடுகளுக்கு இந்திய உதவியிருக்கிறது.
Advertisement
வெளிநாடுகளுக்கான இந்த தேவையை பூா்த்தி செய்வதில் மிகப் பெரிய பங்களிப்பை இந்தியா செய்யும் வகையில், உள்நாட்டு கட்டமைப்புகளை பலப்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சிகளில் வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பு அவசியமாகும். இந்தியாவுடனான உணா்வுபூா்வமான பந்தமே, வெளிநாடு வாழ் இந்தியா்களை இந்த பங்களிப்பில் ஊக்குவிக்கும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு நாட்டுடனான பந்தத்தை பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த முயற்சி ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமும் வெளிப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், கரோனா பொது முடக்கத்தின் போது வெளிநாடுகளில் சிக்கியிருந்த 35 லட்சம் இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனா். அதுபோல, இந்தியாவில் சிக்கிக்கொண்ட 120 வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள், அவா்களின் நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனா் என்று அவா் கூறினாா்.