முகப்பு
இந்தியா

கரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி: அரவிந்த் கேஜரிவால்

கரோனா தொற்றால் உயிரிழந்த தில்லி அரசு மருத்துவா் ஹிதேஷ் குப்தாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ. 1 கோடிக்கான நிதி உதவியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 4:50 am IST
பட்பா்கஞ்சில் உள்ள மருத்துவா் ஹிதேஷ் குமாரின் குடும்பத்தினரை புதன்கிழமை சந்தித்த முதல்வா் கேஜரிவால்
பகிர்:


புது தில்லி: கரோனா தொற்றால் உயிரிழந்த தில்லி அரசு மருத்துவா் ஹிதேஷ் குப்தாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ. 1 கோடிக்கான நிதி உதவியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வழங்கினாா்.

கா்கா்டூமாவில் உள்ள தில்லி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா் ஹிதேஷ் குப்தாவுக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைப் பலன் அளிக்காமல் மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், ஐபி எக்ஸ்டென்ஷனில் உள்ள குப்தாவின் இல்லத்திற்குச் சென்ற கேஜரிவால், தில்லி மக்களுக்கு குப்தா செய்த தியாகத்திற்கும் சேவைக்கும் நன்றி தெரிவித்து ரூ. 1 கோடிக்கான நிதி உதவியை வழங்கினாா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘குப்தாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும். நாங்கள் அவா்களுக்கு எல்லா வழிகளிலும் உதவ முயற்சிப்போம்’ என்று முதல்வா் கேஜரிவால் கூறினாா்ா்.

"மத்திய அரசு செய்யத் தவறினால் தில்லி மக்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்குவோம்'


மத்திய அரசு செய்யத் தவறினால் ஆம் ஆத்மி அரசு தில்லி மக்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கேஜரிவால் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு நாட்டில் இலவச தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யுமாறு ஏற்கெனவே மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். 

நாட்டில் உயிர்காக்கும் மருந்தை வாங்க முடியாத நிலையில் பலர் உள்ளதால், இந்த வேண்டுகோளை விடுத்தேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நாங்கள் பார்ப்போம். கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கவில்லை என்றால், அதை நாங்கள் தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்குவோம். தடுப்பூசி குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். 

அனைத்து நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி மத்திய அரசும் நமது விஞ்ஞானிகளும் கரோனாவுக்கு தடுப்பூசியைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். 

எனவே, எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். 

கரோனா தொற்றுக்கான தடுப்பூசி முதலில் சுகாதாரம் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மக்கள் கரோனாவால் கடந்த ஒரு வருடமாக வேதனையை சந்தித்து வந்தனர். இந்தத் தடுப்பூசி தற்போது கரோனா தொற்றிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என நம்புகிறேன் என்றார் கேஜரிவால்.

தில்லியில் 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 89 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 
முதல்கட்ட தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை தில்லி வந்துள்ளன. இவை தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments