கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், அத்தடுப்பூசி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கோரியுள்ளது. தற்போது வரை கோவேக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து, 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.
அதே வெப்பநிலையில் சேமித்து வைத்து 24 மாதங்கள் வரை பயன்படுத்துவதற்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் பாரத் பயொடெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அதற்கான மருத்துவ ஆய்வு ஆவணங்களையும் அந்நிறுவனம் சமா்ப்பித்துள்ளது.
கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக அதிகரிப்பதற்கு டிசிஜிஐ கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.